தங்களது கோரிக்கை நிறைவேறக் குரல்கொடுத்த மக்கள் நீதி மய்யத் தலைவரை மாணவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவர் அணி சார்பாக, கடந்த 2.8.2021 அன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி அதற்கு தீர்வு கோரி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக மாணவர்களின் படிப்புக்காலமான ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்பு நடந்த காலங்களை தமிழக அரசு கற்ற காலமாக ஏற்கமறுப்பதும், படித்து முடித்து மருத்துவ தகுதிச்சான்றோடு வரும் மாணவர்கள் இங்கே பயிற்சி எடுக்க (Internship) வாய்ப்பின்றி அடுத்த மாநிலங்களில் பயிற்சியெடுக்கும் அவல நிலையை குறியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு, மாணவர்களின் இரண்டாவது கோரிக்கையான இங்கேயே பயிற்சி எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன் பொருட்டு, அயல் நாட்டில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் கமல் ஹாசனை சந்தித்து தங்களுக்காக கோரிக்கை வைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, விடுபட்ட இன்னொரு கோரிக்கையான, ஆன்லைன் கல்விக் காலத்தை மொத்தக் கல்விக்காலத்தில் இணைக்க மக்கள் நீதி மய்யம், அரசை வலியுறுத்தும் என கமல்ஹசான் மாணவர்களிடம் தெரிவித்தார்.